முடிச்சு அவிழ்கின்றது...

இறைவன் எங்கென்று என் குருவிடம் - கேட்டேன்

இதயத்துள் புகுந்து பாரென்று - சொன்னான்

உலகத்தை இறைவன் படைத்ததேன் - என்றேன்

அறியும் பொருட்டு தனைதான் - என்றான்

ஆதம் ஏன் குற்றம் செய்தார் - என்றேன்

இறைவன் அருளுக்கது வழிகோல - என்றான்

சாத்தானை இறைவன் படைத்ததேன் - என்றேன்

சாரற்ற கனிகளைப் பிரித்திட - என்றான்

தலைவிதி என்பது என்னவென்று - கேட்டேன்

தலை கனத்தாடுவோர்க்கு எச்சரிக்கை - என்றான்

வாழ்க்கை என்பது என்னவென்று - கேட்டேன்

வாண வேடிக்கை சில நொடி - என்றான்

மரணம் என்பது என்னவென்று - கேட்டேன்

முரணான செயலுக்கு முடிவுரை - என்றான்

அறிவு என்பதை விளக்குங்கள் - என்றேன்

அறியாமல் இருப்பதே முழு அறிவு - என்றான்

தெளிவு என்பது எப்போது - என்றேன்

தன்னையே அறிந்தபின் வரும் அது - என்றான்

இருவிழி பார்வையோ ஒன்று ஏன் - என்றேன்

இருப்பது யாவுமே ஒன்றெனச் - சொன்னான்

சோதனை என்பது என்னவென்று - கேட்டேன்

வேதனை அடங்கிய இறை நெருக்கம் - என்றான்

தண்டனை என்பது என்னவென்று - கேட்டேன்

கண்டித்து செயல்களை வழிமாற்ற - என்றான்

நல்லோர்க்கே நோய்நொடி அதிகமேன் - என்றேன்

நாவினில் அவன் பெயர் நிலைத்திருக்க - என்றான்

சான்றோர்க்கு பொருட்செல்வம் ஏனில்லை - என்றேன்

சீரழிக்கும் கருவிகள் நமக்கேன் - என்றான்

"கலிமா"வின் உட்பொருள் என்னவென்று - கேட்டேன்

இல்லாமல் உணர்தல் இருப்பதை - என்றான்

மெளனத்தில் மூழ்குவது எவ்வாறு - என்றேன்

கண்ணுடன் எண்ணமும் மூடிவிடு - என்றான்

பாவங்களில் மட்டுமேன் வசீகரம் - என்றேன்

பார்வைகள் பகட்டினில் பதிவதால் - என்றான்

இறைஞானம் கிட்டுவதில் சிரமமேன் - என்றேன்

விரைவாய்க் கிடைப்பது விரயமாகும் - என்றான்

இறைகிருபை இருந்தும் அச்சமேன் - என்றேன்

உயிருடன் கலந்து உடலிருப்பதால் - என்றான்

சொர்க்கம் நமக்குக் கிடைக்குமா - என்றேன்

சொர்க்க அதிபதியைப் பிடிக்க முயல் - என்றான்

தொழுகையின் அர்த்தம் என்னவென்று - கேட்டேன்

வாழ்வதற்குப் பயிற்சி தரணியில் - என்றான்

"ஜகாத்" ஏன் தரவேண்டும் - என்றேன்

ஜகத்தில் வறுமை இல்லாமலாக்க - என்றான்

நொன்பின் மாண்பை விளக்குங்கள் - என்றேன்

நாயனை நெருங்கும் நல்லருள் - என்றான்

"ஹஜ்" ஜின் அவசியம் சொல்லுங்கள் - என்றேன்

அனைவரும் ஒன்றென உணர்த்த - என்றான்

"கிப்லா"வை நோக்கியே தொழுவதேன் - என்றேன்

சக்கரம் சுழல ஒர் அச்சாணி - என்றான்

இறுதிநாள் தீர்ப்பின் பொருளென்ன - என்றேன்

தேர்வின் முடிவைத் தெரிவித்தல் - என்றான்

ஒன்றுக்கு ஒன்றேன் முரண்பாடு - என்றேன்

ஒவ்வொன்றிலும் ஒன்று இருப்பதால் - என்றான்

அலைமோதும் மனதைப் பெற்றதேன் - என்றேன்

வலைவீசும் உலகை விலை பேச - என்றான்

புலனைக் கொண்டு நாம் அறிவதென்ன - என்றேன்

புலன் கடந்து ஒன்றிருப்பதை உணர்த்திட - என்றான்


- திருடியது

நன்றி

நிடுர் இன்போ


Posted by Wafiq on Sunday, August 23, 2009. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for முடிச்சு அவிழ்கின்றது...

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner