பெண்ணியம்

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
பெண் இனத்திற்கு இறைவன் வழங்கிய கண்ணியம்.

"நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள் பார்வையை கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும் அன்றி, தங்கள் தேகத்தில் வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர. தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும் தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்." (24:31) திருக்குரான்

மேலே உள்ள இந்த கட்டளை ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு கொடுக்கக்கூடிய கண்ணியம் அல்ல, மாறாக பெண்ணினத்திற்கே இறைவன் வழங்கிய கண்ணியம் ஆகும்.

ஏனென்றால் இறைவன் மனித இனத்தை படைத்து, அதிலும் பெண்ணினத்திற்கு மட்டும் ஹிஜாப் என்னும் ஆடை முறையையும் குறிப்பிட்டு சொல்வதனால் இதனை இறைவன் பெண்களுக்கு வழங்கிய கண்ணியம் என்றே பெண் சமுதாயம் எண்ண வேண்டும்.

ஆனால் அவ்வாறு எண்ணி பெருமை பட வேண்டிய சமுதாயம் அதையே தனக்கு வேலி என்றும் தன்னை அடிமைப் படுத்துகிறது என்றும், தன் சுதந்திரத்திற்கு தடையாக உள்ளது என்றும் எண்ணி தன் இறைவன் தங்களுக்கு அளித்த கண்ணியத்தை தாங்களே பாழாக்கி சிறுமைப்பட்டுக் கொள்வதையும் பார்க்கின்றோம்.

சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் சர்கோசியும் அவரது ஆதரவாளர்களும் 'பர்தா' பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது, பிரான்ஸ் கலாச்சாரத்திற்கு வேறுபடுகிறது என்று பர்தாவுக்கு எதிரான விவாதத்தில் ஈடுபட்டு சர்சைக்குள்ளாயினர்.

பிரான்சின் கலாச்சாரத்திற்கு வேறுபடுகிறது என்று வருத்தப்பட்டு புலம்பியவர்களின் கலாச்சாரத்தை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால்.....
யார் யாருடனும் பேசலாம், பழகலாம், உறவு வைத்துக் கொள்ளலாம், உறவை முறிக்கலாம். அவர்கள் தங்கள் மேலாடையையும் கீழாடையையும் குறைத்துக் கொள்வது தான் தங்கள் கலாச்சாரம் என்று எண்ணி பெருமை பேசி தங்கள் கற்பையும், வாழ்வையும் சீரழித்து வாழ்க்கையையும் சீரழித்து இருளில் வாழ்கின்றனர்.

இரவையே பகலாக்கக் கூடிய வெளிச்சத்தில் ஹோட்டல்களில் (டிஸ்கொதேக்) ஆடிப்பாடி திரியக் கூடிய அனைத்து மங்கைகளும் உண்மையில் வாழ்வது இருளில் தான்.
இப்படி பெருமை பட்ட(?) கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியத்தை விமர்சிப்பதற்கு எள்ளளவும் ஏன் நுனியளவும் கூட அருகதை கிடையாது.

இந்த கலாச்சாரத்தை தான் மேற்கத்திய கலாச்சாரம், சமுதாய முன்னேற்றம், பெண்களின் சுதந்திரம் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.
National Domestic Violence Survey - தனது ஆய்வில் அமெரிக்காவில் 1 வருடத்தில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் 1 நாளில் மட்டும் 3 பெண்கள் தங்கள் காதலன் / கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள்(?) 1970 களில் போராடிப் பெற்ற அனைத்து பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே போராட்டம், ஆர்ப்பாட்டம், எதுவுமின்றி பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
அதை ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக பல அல்ல ஒரு உதாரணம், ஒரு பெண்ணின் உயிர்த் தியாகம். இந்த உயிர்த் தியாகம் மேற்கத்திய வர்க்கத்திற்கு ஒரு கசையடியாக விழுந்துள்ளதை பத்திரிகைகள் படம் போட்டு காட்டியது.

ஜெர்மனியில் வாழ்ந்து வந்த தம்பதிகள் உக்காஸ் (பொறியாளர்), செர்பினி (மருந்தாளர் துறையில் பட்டப் படிப்பு முடித்தவர்). இவர்களுக்கு 3 வயதான முஸ்தபா என்ற மகனும் உண்டு.
2008 ஆம் ஆண்டு செர்பினி தன் மகன் முஸ்தபாவுடன் சிறுவர் பூங்காவுக்கு சென்று அங்கு நீந்துவதற்கு அலெக்ஸ் என்ற 28 வயது இளைஞரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது அலெக்ஸ் செர்பினியைப் பார்த்து தீவிரவாதி, விபச்சாரி, என்று தூற்றியுள்ளான். செர்பினி இஸ்லாமிய முறையில் ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணம்.
தன்னையும் தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற செர்பினி வழக்காடு மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஜூலை 1 ம் தேதி விசாரணைக்கு வந்தது.
வழக்கில் அலெக்ஸ் 780 யூரோ பணத்தை அபராதத் தொகையாக செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது நீதி மன்றம். உடனே அலெக்ஸ் திடீரெனப் பாய்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி மூன்று மாத கர்பிணியான செர்பினியின் வயிற்றில் 18 முறை குத்தினான். நீதிமன்றத்தின் நடுவே இந்த கோரச் சம்பவம் நடந்தேறியது.
அலெஸை சுட்டுத் தள்ள வேண்டிய போலீசாரோ காப்பாற்ற வந்த உக்காஸ் மீது துப்பாகியால் சுட்டனர். உயிருக்கு போராடிய உக்காஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அப்பாவித் தாயான செர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றிலிருந்த 3 மாதக் கருவும் உயிர் துறந்தது. 3 வயது சிறுவன் முஸ்தபாவிற்கு தன் கண் முன்னேயே தன்னுடைய தாய் உயிர் துறப்பதை காணும் அவலம் ஏற்பட்டது.
மறவா அல் செர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6 ம் தேதி அவரது சொந்த ஊரான எகிப்தின் அலெஸ்ஸான்டிரியா நகரில் நடைபெற்றது.
ஹிஜாபிற்காக ஷஹீதான செர்பினி போராட வேண்டும் என்ற குணம் படைத்தவர்.
இறைவன் பெண்ணினத்திற்கு அளித்த சலுகையோ, உரிமையோ அல்ல இந்த ஹிஜாப், மாறாக இது ஒரு கண்ணியம்.
அந்த கண்ணியத்தை பெண்ணினம் பேண வேண்டும், அதை உணர வேண்டும். அது மட்டுமல்ல ஹிஜாபிற்காக செர்பினி போன்ற ஒரு பெண் அல்ல பல பெண்கள் போராடிக் கொண்டும் அதன் மூலம் இரு உலகிலும் வெற்றிப் பெற்றுக் கொண்டும் தான் உள்ளனர். இந்த போராட்டம் இனி வரும் காலங்களிலும் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு சமுதாயமாக நம் சமுதாயத்தை மாற்றுவோம். நாமும் மாறுவோம். வெற்றி பெறுவோம்.
இறைவன் வழங்கிய கண்ணியத்தை பேணி காப்போம்.

நன்றி
உம்மு ஷஹீதா ஆலிமா

Posted by Wafiq on Friday, September 25, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for பெண்ணியம்

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner